தேனி மாவட்டம் ,கம்பம் நகரில் இருந்து 12 கி.மீ தூரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் சுருளி அருவி விழுகிறது.
மூன்று பக்கமும் விண்ணை முட்டும் மலைகளும்,மரங்களும் சூழ்ந்துள்ள இடத்தின் நடுவில் உள்ள மலையில் 150 அடி உயரத்தில் இருந்து சுருளி அருவி கீழே கொட்டுகிறது.அந்த தண்ணீர் கீழே விழுந்த இடத்தில் இருந்து 150 மீட்டர் தூரம் வழிந்தோடி ,பின் 40 அடி உயரத்தில் கீழே சமதரையில் விழுகிறது.சுருளி அருவியில் ஆண்டுக்கு 365 நாளும் தண்ணீர் கொட்டிகொண்டே இருக்கும்.கடும் வறட்சி காலத்தில் கூட தண்ணீர் வரத்து குறையுமே தவிர முற்றிலும் நின்று விடாது.சுருளி அருவி அமைந்துள்ள மலைக்கு மேலே மேக மலை,பச்சை குமாச்சி மலை ,இரவங்கல் மலை, வெள்ளி மலை என வரிசையாக மலைகள் உள்ளன.இந்த மலைகளில் பெய்யும் மலை நீர் வழிந்தோடி,சுருளி அருவியாக கொட்டுகிறது.இந்த அருவி 2000 ஆண்டுகால பெருமையுடையது.
அருவியை சுற்றியுள்ள இடங்களில் ராமர் குகை,கருட குகை,காளிகுகை, கைலாசர் குகை என 10 குகைகள் உள்ளன.சுருளி அருவிக்கு மேலே 800 மீட்டர் உயரத்தில் கைலாசநாதர் கோவிலும் குகையும் உள்ளது.இங்கு ஒரு தீர்த்தம் உள்ளது.இங்குள்ள தண்ணீரை எடுத்து பருகினால் பலநோய்கள் தீருவதாக ஐதீகம்.

Post a Comment